சிறுகளத்தூர் கிராமம்
சிறுகளத்தூர் கிராமம்
தாம்பரத்திலிருந்து புறப்பட்ட சிறுகளத்தூர் நோக்கி ஆரம்பமானது பயணம். சுமார் ஒன்றரை மணிநேர பயணத்தில் குன்றதுரை வந்தடைந்தேன். அங்கிருந்து சிறிது துரத்தில் அமைந்திருந்தது சிறுகளத்தூர் கிராமம்.
சிறுகளத்தூர் என்பது குன்றத்தூர் தாலுக்காவில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். காஞ்சிபுர மாவட்டத்தில் இருக்கின்ற இந்த கிராமம் சென்னை மாநகரத்திலிருந்து 20 கி.மீ உள்ளாக அமைந்துள்ளது. வயல் நிலம், மரங்கள் படர்ந்த தெருக்கள், பசுச்சாணம் வாசம் வீசும் மண்மேடுகள், எல்லை கூட போடப்படாத வீட்டு வளவுகள், ஈரம் கசிந்த வயல் நிலங்கள் என்று நகரத்தார் பாரதிராஜா படத்தில் பார்க்ககூடிய அழகியல் காட்சிகள் நிறைந்த ஒரு சிறிய கிராமம்.
இங்கு வாழ்கின்ற மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் ஆடு, மாடு வளர்ப்பு காணப்படுகின்றது. இங்கு காணப்படுகின்ற வீடுகளில் பாதிக்குப்பாதி ஓலையால் வேயப்பட்ட களிமண் வீடுகளும், சீமெந்து கல் வீடுகளும் காணப்படுகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் அதிகம் மூன்றுபேர் மட்டும் தங்கமுடியும் ஆனால், ஒவ்வொரு வீட்டிற்கும் தல நான்கிலிருந்து ஐந்துபேர் வரை வசித்து வருகின்றனர். வீடுச்சுவர்களை அரசியல் சின்னங்கள் பொறிக்கப்படுவது தவிர்க்கப்படாத ஒன்று.
சிறுகளத்தூர் வரை மட்டும் சென்னை மாநகரப் பேருந்து சேவை இருக்கிறது. சிறுகளத்தூர் இல் இருந்து சென்னை, பெங்களூர் போன்ற இடங்களுக்கு செல்ல பேருந்து வசதி இருந்தபோதிலும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே அந்த வசதி கிடைக்கிறது. சிறுகளத்தூர் கிராமத்திலிருந்து வருகின்ற மக்கள் சைக்கிள், ஷெயர் ஆட்டோ, மோட்டார் வாகனங்களின் மூலமாகவும் பேருந்து நிலையத்திற்கு வருகின்றனர். இது அங்கு வாழும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளில் பிரதானமான இது ஒன்றாக காணப்படுகிறது.
சென்னைக்கு தண்ணீர் தரும் செம்பரம்பாக்கம் ஏரி இந்த கிராம விவசாயத்திற்கும் குடிநீர், சமையல், சுத்தப்படுத்தல், துவைத்தல் என்று அனைத்திற்கும் உதவுகிறது. பிளாஸ்டிக் குடங்களின் அணிவகுப்பை பார்க்கமுடியும். இரசாயனப் பொருட்கள் கலக்காத சுத்தமான தண்ணீரும் காற்றும் தேவையான அளவு கொட்டிக்கிடகிறது. அநேகமான வீட்டு காணிகளின் மரத்தின்கீழ் காயிற்றுக்கட்டில்களை காணமுடியும். இரவு உறக்கத்திற்கு வீடு மட்டும் போதாதபட்சத்தில் மரத்தடியில் சுகமான உறக்கத்தை நாடுகின்றனர் மக்கள்.
பொதுவாக இங்கு வசிக்கும் மக்களின் ஒருமித்த குறை மின்சாரம்தான். இது தமிழ்நாட்டு மக்களின் பெரும்குறையே, இருந்தபோதிலும் அவர்கள் மின்சாரத்தை எதிர்பார்ப்பது தமக்கு வழங்கப்பட்ட இலவச வர்ண தொலைக்காட்சியில் பொழுதை கழிக்கமுடியவில்லையே என்பதுதான். சிறுவர்களுக்கு விளையாட்டுக்கள் பொழுதுபோக்காக இருக்கின்றது. பெரியவர்களுக்கு முன்னர் இருந்த ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சி தொடர்நாடகங்கள். விவசாயத்திற்கு நீர்வழங்க 2 மணிநேர மின்சாரத்தை இவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.
இந்த கிராமத்தில் ஐந்தாவது வரை மட்டும் கல்விகற்கும் அரசு பாடசாலை ஒன்று மட்டும் இருக்கின்றது. இங்கு இருக்கும் அனைத்து குழந்தைகளும் இந்த பாடசாலையில் கல்விகற்கின்றனர். இந்த கிராமத்தின் எல்லையில் மாத கல்லூரியும், நடுநிலைப்பள்ளி, மேன்னிலப்பள்ளியும் காணப்படுகின்றன.மருத்துவ வசதி இருக்கின்றபோதிலும் இளவயது மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
காந்தி கூறியதுபோன்று இந்தியாவின் வளர்ச்சி கிராமத்தில்தான் இருக்கின்றது. ஆனால் கிராம ஒழிப்பு அதாவது ரியல் எஸ்டேட் தொழில் நோய் படர்ந்து வருகின்றதனால், இதேபோன்று தற்போது இந்த கிராமத்தில் ரியல் எஸ்டேட், அடுக்குமாடி கட்டிடம் அமைத்தல் அதிகரித்துவருகின்றது. இவர்கள் தண்ணீர், மண் என்று வளங்களை உறிஞ்ச ஆரம்பிதுவிடுவதால் கிராமம் எஞ்சுவதே சந்தேகம். அடிப்படையில் இவர்களுக்கு மின்சாரம், போக்குவரத்து பிரச்சனையாக இருக்கின்றபோழுதும் இவர்களை தாக்கவிருக்கும் பெரும்பிரச்சினை அடுக்குமாடி அமைத்தலும், ரியல் எஸ்டேட் தொழிலுமே.
அன்று இரவு கிடைத்த காயிற்று கட்டிலின் சுகமான உறக்கத்திற்கும், அவர்கள் எனக்கு அழித்த தகவலுக்கும், அவர்களது விருந்தோம்பலுக்கு நன்றி கூறிவிட்டு விடைபெற்றேன். அடுத்தநாள் காலை பேருந்து தாம்பரம் நோக்கி புறப்பட்டது.
- நான் -

Comments
Post a Comment